
தமது அரிய சாதனைகளால் தேசிய மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற, இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இருந்தான பொக்கிஷங்களை ஆவணமாக்கும் செயற்பாட்டின் முதற்கட்ட முயற்சியாக “தேசிய சாதனை மடல்” நூலை வெளியிடுகின்றார் மீள்பார்வை பத்திரிகையில் பத்தி எழுத்தாளராக கடமையாற்றி, தற்போது பிரதமர் அலுவலகத்தில் தகவல் அலுவராக பணியாற்றும் அனஸ் அப்பாஸ்.
இந்நூல் வெளியீடு ஆகஸ்ட் 7 ஆம் திகதி (நாளை, செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு கொழும்பு D.R விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ளது.
பேச்சாளர் அஷ் ஷெய்க் ரவூப் ஸெய்ன் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தபால் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ M.H.M. ஹலீம், கௌரவ அதிதியாக இலங்கைக்கான துருக்கி நாட்டின் தூதுவர் கௌரவ துன்கா ஒஸ்ஷுஹதார் வருகை தருகின்றனர்.
நூல் அறிமுக உரையை சிரேஷ்ட ஊடகவியலாளரும், பிரபல கவிஞருமான அஷ்ரப் ஷிஹாப்தீன் மேற்கொள்வார். நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்கள் விஷேட உரை நிகழ்த்துவார்.
இந்நிகழ்வில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், ஊடக விருந்தினர்கள், பிரமுகர்கள் பலர் வருகை தருவதுடன், சாதனையாளர்கள் 29 பேருக்குமான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இதில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)